வாசிப்பை நேசிப்போம்
இக்கட்டுரை
இலங்கையின் தேசிய நாளேடான ‘வீரகேசரி’ இல் 24.02.2008 அன்று கதிர் பகுதியின் 04 ஆம் பக்கத்தில் வெளியானது. ‘சிகரம் பாரதி’
என்னும் புனை பெயரில் வெளியானது.
வாசிப்பை நேசிப்போம்
வாசிப்பு ஒரு மனிதனை
முழு மனிதனாக்கும். அதிலும் பத்திரிகை வாசித்தல் மனிதனை பல்துறை சார்ந்த அறிவு
கொண்டவனாக மாற்றும். இலக்கியம், அரசியல், விளையாட்டு என பல செய்தி வகைகள்
பத்திரிகையில் உள்ளன. அத்துடன் நம்முடைய திறமைகளை வெளியிட ஆக்கங்களையும்
பிரசுரித்து ஊக்கம் தருகிறது. மேலும் கேள்வி கேட்கும் சுதந்திரம் பத்திரிகைகளிலேயே
அதிகம் கிடைக்கிறது.
நூல்கள் எமக்குக்
கிடைத்த ஒரு பொக்கிஷமாகும். செதுக்கி வைக்கப்பட்ட கல்வெட்டுக்கள் வைரத்திலும்
உயர்வானவை. புத்தகங்களும் அது போன்றவையே. ‘உனக்கு வரம் வர யாரோ இருந்த தவமல்லவா
புத்தகம்’ என்கிறார் வைரமுத்து. மேலும் ‘ஒரு நல்ல புத்தகம் திறந்துகொண்டால்
நரகத்தின் வாசல் மூடப்படும். ஒவ்வொரு பக்கம் நகரும் போதும் நீ எதிர்காலத்துள்
காலடி வைக்கிறாய் – ஒரு புத்தகம் முடிகிறது மனசின் மர்மப் பிரதேசம் விடிகிறது’
என்றும் கூறியிருக்கிறார் வைரமுத்து.
வாசிப்பதற்கும் மலையக
மக்களின் முன்னேற்றத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது எனக் கேட்கத் தோன்றும்.
இப்போது மலையக மக்களைப் பற்றிய நூல்களும் பத்திரிகைப் பகுதிகளும் அதிகளவில் வெளிவர
ஆரம்பித்துள்ளன. வீரகேசரியின் ஞாயிறு குறிஞ்சிப் பரல்கள் மற்றும் புதன் சூரியகாந்தி
வெளியீடு என்பன மலையக மக்களின் குரல்களை அதிகளவில் பிரதிபலித்து வருகின்றன.
பல அரசியல்வாதிகள், சமூக
சிந்தனையாளர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் என
பலதரப்பட்டவர்களினதும் கருத்துக்கள் பத்திரிகைகளில் வெளியாகிவருகின்றன. அதிலும் மேற்கண்ட
துறைகளில் மலையகத்தில் பிரபல்யம் பெற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்பட்டு
வருகிறது.
சூரியகாந்தி இதழில்
சுட்டிக்காட்டப்பட்ட பிறகு மலையகப் பிரதேசங்களில் காணப்பட்ட குறைகள்
திருத்தியமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலமே பத்திரிகைகள் மலையக மக்களின்
வாழ்வில் எவ்வளவு செல்வாக்கு செலுத்துகின்றன என்பதை அறிய முடியும்.
மலையக மக்கள் பத்திரிகை
வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் தமது பிரச்சினைகளை சர்வதேச
அரங்கிற்கு கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் எமது பிரச்சினைகளை இலகுவாகத்
தீர்க்க முடியும்.
ஆனாலும் முதலில்
நூலகத்தை அமைப்பதை விட வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். மூன்று, நான்கு பேர்
சேர்ந்து பத்திரிகை வாங்கிப் படிக்க வைத்தாவது அந்த ஆர்வத்தை உருவாக்க வேண்டும்.
மலையக சமூகத்தை முன்னேற்ற இப்போதைக்கு இதுதவிர சிறந்த மாற்றுத் திட்டம் இல்லை.
அரசியல்வாதிகள் இதைச்
செய்ய மாட்டார்கள். மக்கள் வாசிக்கும் அறிவைப் பெற்றுவிட்டால் தமது
தில்லுமுல்லுகள் பலிக்காது போய்விடும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கத்தான்
செய்யும்.
பாடசாலைக் கல்வியை
விட மலையக இளம் சமுதாயத்தினர் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதே மிக
முக்கியமானது. பாடசாலைக் கல்வியிலும் மலையக மக்கள் முன்னேறி வருகிறார்கள்
என்பதையும் பத்திரிகைகள் வாயிலாகத் தானே அறிய முடிகிறது?
வாசிப்பு என்பது சுவாசிப்பு போல இருக்க வேண்டும்...
ReplyDeleteதங்களுக்கும்
ReplyDeleteஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
#அரசியல்வாதிகள் இதைச் செய்ய மாட்டார்கள். மக்கள் வாசிக்கும் அறிவைப் பெற்றுவிட்டால் தமது தில்லுமுல்லுகள் பலிக்காது போய்விடும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும்.#
ReplyDeleteஎல்லா நாடுகளிலும் இதே பிரச்சினைதான் :)