சிகரம் பாரதி 37 / 50 - மக்கள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்! - 02
வணக்கம் வாசகர்களே! தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா 05.12.2016 அன்று காலமானார். 75 நாட்களாக சென்னை அப்போலோ தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா 05 ஆம் திகதி மரணமானதாக அறிவிக்கப்பட்டது. இங்கே 'அறிவிக்கப்பட்டது' என்னும் சொல்லைக் கவனத்திற் கொள்ளுங்கள். ஏனெனில் ஜெயலலிதா மயங்கி விழுந்தபோதுதான் கட்சியினர் கடைசியாக அவரைக் கண்ணால் கண்டார்கள். அதன் பின் டிசெம்பர் 05 ஆம் திகதி பிணமாகத்தான் அவரைக் காணக் கிடைத்தது. வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து மரணமானதாகச் சொல்லப்படும் நாள் வரை 75 தினங்களாக தமிழக முதல்வரை உயிருடன் வைத்திருந்தது அப்போலோ அறிக்கைகள் தான்.
மரணம் தொடர்பில் நிலவிவரும் சர்ச்சைகளுக்கு ஒரு முடிவில்லை. ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால் அவை அனைத்தும் வினவுவது 75 நாட்களாக என்ன நடந்தது ஜெயலலிதாவுக்கு? உண்மையில் அவர் 05 ஆம் திகதி தான் மரணமானாரா? இரகசியமாக அவரை வைத்திருந்தது ஏன்? என்னும் கேள்விகளைத்தான். தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் தேசிய மட்ட அரசியல்வாதிகளும் கூட ஜெயலலிதாவை நலம் விசாரிக்க அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்தனர். ஆனால் அவர்களால் தோழி சசிகலாவைத்தான் சந்திக்க முடிந்ததே தவிர ஜெயலலிதாவை தூரத்தில் இருந்து காணும் வாய்ப்புக் கூடக் கிடைக்கவில்லை. பிரான்ஸ் வாழ் தமிழரான தமிழச்சி என்பவர் 02.10.2016 அன்று பேஸ்புக்கில் இவ்வாறு எழுதினார்:
அப்பலோ நாடகம் முடியும் நேரம்.
காட்சிகள் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 11-வது நாளான இன்று ஓரே நேரத்தில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு அவசர ஆலோசனை நடத்துகின்றனர். இதை செய்வது காவல்துறையினர்.
ஒன்று இறுதியான முடிவு அறிவிக்கப்படும். அல்லது 'சிங்கப்பூருக்கு ஜெயலலிதா அவசரமாக அழைத்துச் செல்லப்படுகிறார்' என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு தமிழக மக்களிடம் அறிவிப்பு செய்யப்படும்.
ஆனால் சிங்கப்பூருக்கு கொண்டு சென்ற சில மணி நேரங்களில் ஒரு அறிவிப்பு வரும் பாருங்கள்...
ராம்குமார் இறுதி சடங்கு இன்று நடைபெறும் நேரத்தில் இந்த நாடகத்தை குறித்து பேசுவதென்பது மிக துன்ப நிகழ்வியல்.
ஒரு அப்பாவி இளைஞனின் படுகொலையைவிட, மாபீயா அரசியல் கூட்டம் செய்யும் சூழ்ச்சியான நகர்வுகள்கள் மட்டும் எத்தனை முக்கியத்துவமாக்கப்படுகிறது இந்த நாசமாய் போன சமூகத்தில்?
#தமிழச்சி
02/10/2016
பதிவர் தமிழச்சி சொல்வது போல ஜெயலலிதா இறந்து 70 நாட்கள் ஆகிறதா? பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக தமிழச்சி மீது அவதூறு வழக்குகள் போடப்பட்டன. ஆனால் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். தொடர்ந்து 04.12.2016 இல் இவ்வாறு ஒரு பதிவையும் வெளியிட்டார்.
ஜெயலலிதா 2வது முறையாக இன்று இறந்துவிட்டார். இதயத்துடிப்பு நின்று (முடங்கி) விட்டதாக அப்போலோ அறிவித்துள்ளது.
அதிமுக அடிமைகளே!
இப்போது ஒப்பாரி மட்டும் தானே வைக்க முடியும்?
'அம்மா'வின் உண்மை நிலை என்ன என்பதை அப்போதே அப்போலோவிற்குள் நுழைந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பதையாவது கண்டுபிடித்து இருக்கலாமே?
இதைப் போலவே இன்றும் விகடனில் வெளிவந்துள்ள கட்டுரையின் ஒரு பகுதி உங்களுக்காக இங்கே.
// முதலில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெறும் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று தானே சொன்னீர்கள்..! பின் நுரையீரலில் பிரச்னை என்றீர்கள். சில தினங்களுக்குப் பிறகு ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என்றீர்கள். அதன் பின், ஜெயலலிதா வீடு திரும்புவதை, ஜெயலலிதாவே முடிவு செய்ய வேண்டும் என்றீர்கள். உண்மையில் சொல்லுங்கள்! இந்த 75 நாட்களில் என்ன நடந்தது ஜெயலலிதாவுக்கு...?
மேலுள்ள பத்தியில் ‘சொன்னீர்கள்’... ‘என்றீர்கள்’... போன்ற பதங்கள் இருக்கின்றன அல்லவா... அது எதுவும் அரசு நிர்வாகத்தைக் குறிப்பவை அல்ல. அனைத்தும் அப்போலோவை குறிப்பவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மருத்துவமனையில் இருக்கும்போது, அவர்கள் உடல்நிலை குறித்து மக்களிடம் தெரிவிக்க வேண்டியது அரசா... இல்லை அப்போலோவா...? மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள். நிச்சயம் அப்போலோவுக்கு இல்லைதானே...?! ஏன் அரசு மெளனியாக இருந்தது. அதிகாரிகளை தடுத்தது எது... இல்லை யார்...?
அப்போலோவில் ஜெயலலிதாவை நலம் விசாரித்தேன் என்று சொன்னவர்கள் அனைவரும் சந்தித்தேன் என்றுதான் எல்லாம் சொன்னார்களே அன்றி... ’ஜெயலலிதாவைச் சந்தித்தேன்’ என்று யாரும் சொல்லவில்லை... உண்மையில் ஜெயலலிதாவைச் சந்தித்தது யார்...? அவரை கவனித்துக் கொண்டது யார்...? சசிகலாதான் என்றால்... மத்திய, மாநில மந்திரிகளை தடுக்கும் அளவுக்கு, அவர் மாநில நிர்வாகத்தில் உயரிய பொறுப்பை வகிக்கிறாரா..? இல்லை, அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழுவில் இருக்கிறாரா அவர்...?
இந்த 75 நாட்களில் ஒருவரையும் அவர் கண்ணுக்கு காட்டவில்லை, ஒருவருக்கும் அவரைக் கண்ணில் காட்டவில்லை... எதை மறைக்கப் பார்க்கிறார்கள்... யார் மறைக்கப் பார்க்கிறார்கள்...?
ஜெயலலிதா மரணம் என்ற செய்தி டிசம்பர் 5, திங்கட்கிழமை மாலையே தொலைக்காட்சிகளில் ஓடுகிறது. அதுவும் ஜெயா தொலைக்காட்சியில்... அந்தச் செய்தியை ஒளிபரப்பியது யார்...?
’எங்கள் ‘அம்மா’வை... தமிழக முதல்வரை... மன்னார்குடி குடும்பத்தினர் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. அவருடைய மரணத்துக்குப் பின்னரும் கூட, அவர்களிடமிருந்து மீட்க... இந்த அரசமைப்பும், அதிகாரிகளும் தவறி விட்டார்கள்!’ என்று கதறுகிறானே அ.தி.மு.கவின் சாமான்ய தொண்டன். உண்மையா...? உண்மையென்றால், வார்டு மெம்பராகக் கூட இல்லாத சசிகலாவுக்கு மந்திரிகளும், அதிகாரிகளும் அஞ்சி நடுங்குவது ஏன்...?
ஜெயலலிதா இருக்கும் வரை நடராஜனை போயஸ் தோட்டத்துக்குள் அனுமதிக்கவில்லை. இன்று அவர் அனைத்திலும் முன்னால் நிற்கிறார். இறுதி ஊர்வலத்திலும் செல்கிறார். மோடி அவரிடம் பேசுகிறார். என்ன நடக்கிறது இங்கே...? யார் அவர்...? மாநில அமைச்சரா... இல்லை, அரசு அதிகாரியா...? இல்லை, இன்னும் மக்கள் தொடர்பு இணை இயக்குனரா...?
ஜெயலலிதா சசிகலாவை மட்டும்தான், தன் உடன்பிறவா சகோதரி என்றாரே தவிர... திவாகரனை, மஹாதேவனை, வெங்கடேசனை எல்லாம் அவர் ஏற்றுக் கொள்ளவேயில்லை. ஆனால், நேற்று அவர்கள்தான் ஜெயலலிதாவின் உடல் அருகே நின்றார்கள். ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபா பாவமாக ஒரு ஓரத்தில் ராஜாஜி அரங்கத்தில் நிற்கிறார். அவரை ஓரங்கட்டுவது ஏன்...? எதனால்...? // (நன்றி : விகடன் , கட்டுரை : ‘என்ன ஆச்சு எங்கள் ‘அம்மா’-வுக்கு?’ அ.தி.மு.க. அதிகார மையத்துக்கு ஒரு சாமான்ய தொண்டனின் கடிதம்!)
ஜெயலலிதா இயற்கையாக மரணம் ஆனாரா? அல்லது கொல்லப்பட்டாரா? மரணம் மர்மம் நிறைந்ததா? பெரும் அரசியலை உள்ளடக்கியதா? மோடி இதன் மூடியா? இவ்வாறான மக்களின் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா?
காலம் பதில் சொல்லும் வரை காத்திருப்போம்!
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்