சாதனைகளும் சோதனைகளும்......
அன்பார்ந்த வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நேற்று நீண்ட நாட்களுக்குப் பின் பதிவிட்ட போது நீங்கள் தந்த உற்சாக வரவேற்பு என்னை இன்றும் பதிவுலகின் பக்கம் அழைத்து வந்திருக்கிறது. நேற்று நான் ஊடகப்
பாதையில் பயணிக்க ஆரம்பித்து 7 வருடங்கள் பூர்த்தி ஆனதையிட்டு பதிவிட்டிருந்தேன். அதன் போது குறிப்பிட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த இன்னுமொரு மைல்கல்லை மறந்துவிட்டேன். இந்த "சிகரம்" வலைத்தளம் ஆரம்பித்து ஒரு வருடம் கடந்த மே மாதம் இரண்டாம் திகதியோடு பூர்த்தி ஆகியிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவும் ஆசிகளும் எனக்குத் தேவை.
மனதில் எத்தனை எத்தனையோ ஆசைகளும் கனவுகளும்.... அத்தனையையும் நிறைவேற்ற எண்ணினால் திரும்பும் பக்கமெல்லாம் சிக்கல்கள். சிக்கல்களைத் தீர்த்துவிட்டு நிமிர்ந்தால் காலம் எல்லை கடந்து விட்டிருக்கும். எதிர்காலத்தை நினைத்தால் மலைப்பாகத் தான் இருக்கிறது. ஆனால் எதனையும் விட்டுவிட முடியாது. போராடவேண்டும். போராடலாம்..... எத்தனை காலத்திற்கு? மாற்றுத் திறனாளிகளே எவ்வளவோ சாதிக்கும் போது நம்மால் முடியாதா என்ன? அதுவும் உங்களைப் போன்றோர் துணையிருக்கும் போது?
நான் எண்ணியிருக்கும் சில விடயங்களை இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றிவிட வேண்டும். ஆனால் அதன் முன்னாலிருக்கும் சவால்கள் அநேகம். ஒரு நல்ல துணையிருந்தால் எதையும் இலகுவாகச் சாதித்து விடலாம் அல்லவா? வாழ்க்கையும் ஒரு வியாபாரம் தான். இருக்கும் குறுகிய வளங்களைக் கொண்டு நிறைய சாதிக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் நம்மை முந்திக் கொண்டு முன்னேறக் காத்திருக்கின்றனர் பலர். கடந்த வருடம் பாடுபட்டதில் தமிழ்மணத்தில் 300 அளவிலான இடத்தைப் பிடித்திருந்தேன். நேற்று பார்க்கும் போது 900 க்கும் அதிகமான இடத்தில் இருத்தப்பட்டுள்ளேன். வரும் காலங்களில் இடையிடையே பதிவிட்டேனும் என்னுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொள்வது அவசியமெனப் படுகிறது.
கடந்த காலங்களில் அநேகமான தவறுகளை இழைத்திருக்கிறேன். முக்கியமானது கல்வி மற்றும் சேமிப்பு. நான் பாடசாலைக் கல்வியை 2009 ஆகஸ்ட் இல் நிறைவு செய்தேன். 2010 நவம்பரில் தற்போதைய தொழிலில் இணைந்தேன். இரண்டரை வருட தொழில் அனுபவம் கிடைத்திருக்கிறது. ஆனால் என்னுடைய சேமிப்பு மிகச் சொற்பமே. அதனை வைத்துக் கொண்டு எந்தவொரு முக்கியமான செலவுகளையும் மேற்கொள்ள முடியாது. கல்வியைப் பொறுத்தவரையில் 3 மாத கணினிக் கற்கை நெறியொன்றை (Photoshop) நிறைவு செய்தது மட்டுமே.
குடும்பத் தேவைகளையும் எனது தேவைகளையும் இணைத்துக் கொண்டு பயணிப்பது மிகச் சிரமமாக உள்ளது. அதேவேளை குடும்பத்தை தவிர்த்து விட்டும் என்னால் பயணிக்க முடியாது. சரியாக ஆலோசனை தந்து வழிகாட்ட யாரும் இல்லாதிருந்தமையே எனது தோல்விக்குக் காரணம் என்று எண்ணுகிறேன். ஆம். வாழ்க்கையில் சிறு தோல்வியை சந்தித்திருக்கிறேன். மீண்டெழ வேண்டும்.
இதுவரை வாழ்க்கை எனக்கு பல படிப்பினைகளைத் தந்திருக்கிறது. எதிர்கால சாதனைகளுக்கான மூலதனங்கள் அவை. என்னுடைய பதிவைப் படித்ததும் உங்களுக்குள் சில ஆலோசனைகள் தோன்றியிருக்கலாம். அவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்!
மீண்டும் மற்றுமொரு பதிவில் இனிதே சந்திப்போம்.
அன்புடன்,
சிகரம்பாரதி.
சிகரம் வலைத்தளம் தொடங்கி ஏழு வருடங்கள் ஆகிவிட்டது அறிந்து மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteசிக்கல்கள் இல்லாத வாழ்க்கை என்பது வெகு சிலருக்கே சாத்தியம். விடாமுயற்சியோடு உங்கள் பயணத்தினை தொடங்கிட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். வாழ்த்துகள்.
சிறு துளிதான் பெருவெள்ளமாகிறது ஆகவே சிறுக சிறுக சேமிப்பது நல்லதே...!
ReplyDeleteவாழ்க்கையில் நல்லதொரு 'இடத்தை'... திருப்தியான 'இடத்தை' அடைய வாழ்த்துக்கள்... அது தான் முக்கியம்...
ReplyDeleteஅனுபவமே நல்ல ஆசான்.. உங்களுக்கு நல்ல சிந்தனைகள் இருக்கிறது, அவற்றை உங்கள் வாழ்க்கையில் முதலிடுங்கள்..
ReplyDeleteஅடிக்கடி எழுதுங்க.. கலக்குங்க..
என்னதான் நடந்தாலும் மனசில போட்டுக்காதிங்க பாஸ்..... எல்லாம் நல்லதாவே நடக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅனுபவமே நல்ல வழிகாட்டி நண்பா... நாமலே ஆயிரம் பேருக்கு வழிகாட்டலாம், நமக்கு வழிகாட்ட மற்றவரை எதற்கு தேடனும்... எது நடந்தாலும் நல்லதுக்குன்னே நினைத்துக்கொள்ளுங்கள் நண்பா...
ReplyDeleteஎல்லாம் நன்மைக்கே!!!
வணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...
அலோசனை ! அது எல்லோரும் சுலபமா கொடுத்திருவாங்க ஆனா வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவது கடினமே அவங்களுக்கே கூட. உங்களின் திறமை மீது உங்களுக்கு நம்பிக்கை இருப்பது உங்களின் எழுத்துக்களில் வெளிப்படுகிறது. முதல் இடம் கடைசி இடம் இதெல்லாம் ஒரு மாயை. தற்போதைய நிலை என்னவே அது தான் நிஜம். நாம் நினைப்பது போல எதுவுமே எப்போதுமே நடந்துவிடுவதில்லை. காலத்தின் போக்கில் செல்ல கற்றுக்கொள்வதே நம்முடைய வாழ்க்கையை இனிதாக்கும். என்னை பொருத்தளவில் இன்றைய, இப்போதைய நொடியை ரசிக்கிறேன். எதிர்காலம் குறித்து கவலை கொள்வதில்லை.
ReplyDeleteவணக்கம் பாரதி...நிறைய நாளுக்கு பிறகு சந்திப்பதில் சந்தோசம்.மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்தோழா!வாழ்க்கையில் வானமளவும் வசப்படும் நண'பா..தைரியமாய் பயணிப்போம்....!
ReplyDelete