உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (02) - தொடக்க விழா

                             உலகத் தமிழ் இலக்கிய விழா கோலாகலமாக கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் துவங்கியிருக்கிறது. காலை 8 மணி முதல் 10 மணி வரை பேராளர்களைப் பதிவு செய்யும் நிகழ்வு இடம் பெற்றது. நான் எனக்கான பதிவை 10 மணிக்கே மேற்கொண்டேன். பேராளர்களாக பதிவு செய்து கொண்டவர்களுக்கு தோல் பை ஒன்று வழங்கப்பட்டது. அதில் கொழும்பு தமிழ்ச் சங்க வெளியீடான 'சங்கத் தமிழ்' இதழ் ஒன்றும் குறிப்பெடுத்துக் கொள்வதற்கான கோவை ஒன்றும் நிகழ்ச்சி நிரலும் க.ஜெயவாணி என்பவரின் 'இப்போது வந்த சொல் எப்போது வந்த கவிதை நீ?' என்னும் கவிதை நூலும் இட்டு வழங்கப்பட்டன. சரியாக 10 மணிக்கு தொடக்க விழா ஆரம்பமானது. "தமிழ் இலக்கியமும் சமூகமும் : இன்றும் நாளையும்" என்ற தொனிப் பொருளில் மாநாடு இடம் பெற உள்ளது.

                               மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து அருணந்தி ஆரூரன் அவர்களின் கணீர் குரலில் தமிழ் வாழ்த்து பாடப்பட்டது. இந்த தொடக்க விழா அரங்கிற்கு 'தமிழ்த் தூது தனி நாயகம் அடிகள் அரங்கு' எனப் பெயரிடப்பட்டிருந்தது. வரவேற்புரையினை தமிழ்ச் சங்க இலக்கியப் பணிக் குழுச் செயலாளர் டாக்டர் தி.ஞானசேகரன் வழங்குவார் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆயினும் தமிழ் நாடு புதுச்சேரி பல்கலைக் கழக பேராசிரியர் அறிவு நம்பி அவர்களே வழங்கினார். அவர் தனதுரையில் தமிழகத்தில் தற்போதய தமிழின் நிலை பற்றி விளக்கும் வகையில் இரண்டு புதுக் கவிதைகளைப் பகிர்ந்து கொண்டார். அவற்றை இந்த இடத்தில் வழங்க எண்ணுகிறேன்.

01 . மிஸ்
       தமிழ்த் தாயே
       நமஸ்காரம்.

02 . அம்மா
       வறுமைதான்
       உன்னைக் காத்தது,
       இல்லையென்றால் நீ 
       மம்மியாகியிருப்பாய்.

                                 தொடர்ந்து மாநாட்டு மலர் வெளியீடு இடம் பெற்றது. 'பூவல்' என்ற மகுடத்தில் மாநாட்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.தமிழ்ச் சங்க தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் திரு.காசிம் அகமது அவர்களுக்கு முதற் பிரதியை வழங்கி வெளியிட்டு வைத்தார். வெளியீட்டுரையினை பேராசிரியர் சபா ஜெயராசா நிகழ்த்தினார். அவர் தனதுரையில் ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக் காட்டினார். நம்மிடையே கலைஞர்களை பாராட்டும் ஒரு மரபு இருக்கிறது. எழுத்தாளர்கள், நாட்டிய கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் என பலரையும் பாராட்டுகிறோம். ஆனால் ஓவியக் கலைஞர்களை பாராட்டும் வழக்கம் அரிது. அதை இந்த மாநாட்டு மலர் நிவர்த்தி செய்திருக்கிறது. ஓவியத்திற்கும் இதில் இடம் வழங்கப் பட்டிருக்கும் அதே வேளை ஓவியக் கலைஞர் ஒருவரும் கலைஞர்கள் கௌரவிப்பில் இடம்பெற்றுள்ளார்.

                           மேலும் புதிய கலைச் சொல்லாக்கம் பற்றியும் அவர் குறிப்பிட்டார். ஆங்கில வாசகன் புதிய கலைச் சொற்களை கண்டதும் மகிழ்ச்சி கொள்கிறான். ஆனால் தமிழ் வாசகன் புதிய கலைச் சொற்களை கண்டதும் தன் மீது தேவையில்லாத ஒரு விடயம் திணிக்கப் படுவதாக உணர்கிறான். இது மாற வேண்டும் என குறிப்பிட்டார்.

மாநாட்டு சிறப்பு மலரின் முகப்பு அட்டை 
                                     தொடர்ந்து சிறப்புப் பிரதி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை காவல் துறை போக்குவரத்து பிரிவு அத்தியட்சகர் திரு அரசரத்தினம், திரு.எம்.ஏ நுஹ்மான் மற்றும் திரு.அறிவு நம்பி ஆகியோர் தமிழ்ச் சங்க தலைவரிடமிருந்து சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர். அதனை அடுத்து மாநாட்டை தொடங்கி வைக்கும் ஆதார சுருதி உரை நிகழ்த்தப் பட்டது. அந்த உரையில் சுட்டிக் காட்டப் பட்ட விடயங்கள் வருமாறு.
                                                                           
                                யுத்த காலத்தில் அரச வன்முறைகளை இலக்கியத்தில் பதிவு செய்தவர்கள் விடுதலை இயக்கங்களின் வன்முறைகளைப் பதிவு செய்யத் தவறி விட்டனர். நமது கடந்த கால இலக்கியங்கள் எல்லாமே 'எதிர்ப்பு இலக்கியமாக' அமைந்திருக்கின்றன. அதாவது சாதி, அடக்குமுறை போன்ற பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கும் எதிரான இலக்கியங்களாக படைக்கப் பட்டிருக்கின்றன. நாளைய இலக்கியம் வர்க்க பாகுபாடுகளற்ற தனி மனித சுதந்திரத்தை அடையாளப் படுத்துகின்ற இலக்கியமாக இருக்க வேண்டும் என எதிர் பார்ப்பதாக குறிப்பிட்டார்.


                            தொடர்ந்து நன்றியுரை இடம் பெற்றது. நன்றியுரை ஆரம்பித்ததும் சிலர் எழுந்து வெளியில் சென்றனர். மேலும் சிலர் தமது சுய உரையாடல்களில் ஈடுபட ஆரம்பித்தனர். இது தவிர்க்கப் பட வேண்டியது என்பது எனது கருத்து. நன்றியுரையினை தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் திரு.ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன் நிகழ்த்தினார். எல்லோருக்கும் நன்றி செலுத்திய அவர் "எமக்கு போதிய விளம்பரம் தந்த வை.கோ வுக்கும் எனது நன்றிகள்" என்றும் குறிப்பிட்டார். சங்க கீதத்துடன் தொடக்க விழா நண்பகல் 12 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.


தகவல்கள்: உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 இல் இருந்து நேரடியாக - சிகரம் பாரதி.

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!